கேரள மாநிலம் ஒலவக் கோட்டில் வாழ்கையைத் தொடங்கிய வடிவேலு அவர்களுக்கு வாழ்க்கைத் துணைவி அமைந்த இடம் தமிழகத்தைச் சேர்ந்த தாரபுரம். கேரளாவில் இருந்த பெரிய மர வியாபாரி பா.நா.துரைசாமிப்பிள்ளை தனது மகனுக்குத் தாராபுரத்தில் பெண் எடுத்து விட்டார். அது முதல் வடிவேலு தாராபுரத்துக்கு வந்து சேர்ந்த மாப்பிள்ளை என அவ்வூர் மக்கள் அழைக்கத் தொடங்கினர்.
தாராபுரத்துப் பெண்மணியும், வடிவேலுவின் மனைவியுமான செல்வநாயகிம்மாள் தனது கணவன் செயலுக்கு உறுதுணையாகவே எப்போதும் இருந்து வந்தார். அவர்கள் இருவரும் மனமொத்து வாழ்க்கையில் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர்.
வெள்ளைக்காரன் ஸ்டேன்ஸ் கம்பெனியை விலக்கி வைத்துவிட்டு, தாராபுரத்துக்கு மருமகனாக வந்த வடிவேலு, தாராபுரம் நகராட்சியில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வேலையில் சேர்ந்தார். தொழிலும் நல்ல தொழில் வருமானத்துக்கும் நல்ல உத்திரவாதம். கணவனும் மனைவியும் களிப்புற்று வாழ்ந்தனர். வாரிசுகள் தோன்றத் தொடங்கின.
அளவான குடும்பமே ஆரோக்கியம் மிக்கது, சிறிய குடும்பமே சிறப்புத் தருவது என்ற உபதேசங்கள் உலா வராத காலம் அது. தனக்கு பின்னால் தனக்கும், தன் உற்றார் உறவினர்களுக்கும், தன் நாட்டுக்கும் எத்தனை பேர் உறுதுணையாக நிற்பர் என்ற கேள்வியே குடும்பங்களின் வாரிசுகளைத் தீர்மானித்திருந்த காலம் அது. அதனால் எண்ணிக்கையை விட எண்ணங்களே குடும்ப வாழ்வில் தம்பதியர் மனதில் கோலோச்சி நின்றன. இங்கே வரம்புகளை விட வாரிசுகளே முதலிடம் பெற்றிருந்தனர்.
வடிவேலு செல்வநாயகியம்மாள் தம்பதியர்க்கு வாரிசுகள் ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள். இன்றைய கண்ணோட்டத்தில் இது ஆச்சரியமாகக் கூடத் தோன்றலாம். ஆனால் அன்றைய நிலைமையில் இது அவசியத் தேவை என்று கருதப்பட்டிருக்கக் கூடும்.
அத்தம்பதியினர் வழியொற்றி, அவர்தம் நினைவுகளை இவ்வுலகிற்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் அவர்களின் வாரிசுகள் பத்துப்பேர் ஆவர்.
அவர்கள், வ. விஜயபாஸ்கரன், பத்மலோசனி, வ. பூபேந்திரநாத், சகுந்தலா, வ. ஜிதேந்திரநாத், மங்கையர்கரசி, வ. சண்முகசுந்திரம், வ. மோகனகிருஷ்ணன், காஞ்சனமாலா, சசிகலா, ஆகியோர்.
வடிவேலு செல்வநாயகியம்மாள் பெற்றெடுத்த இந்தப் பத்துப் பேர்களும் அரசு மற்றும் பொதுப்பணிகளில் தங்களது தாய் தந்தையர் பெயரை எட்டுத் திக்கும் நிலைநாட்டப் பணி புரிந்து வருகிறார்கள் என்பது கண்கூடு. புலிக்குப் பிறந்த எந்த ஒரு குட்டியும் பூனையாகிவிடவில்லை. இது அவர்கள் பெற்றெடுத்த வாரிசுகளின் விஷயத்தில் மட்டுமல்ல அவர்களது வாரிசுகள் பெற்றெடுத்த பேரன், பேத்திகளும் தங்களது தாத்தா, பாட்டிகளின் அடிச்சுவட்டில் வந்தவர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவு உறுப்பினர்களைக் கொண்ட தனது குடும்பம் வடிவேலுவுக்கு ஒரு சுமையாகவோ அல்லது தாங்க முடியாத பாரமாகவோ தோன்றியிருக்க வாய்ப்பில்லை. நாட்டு மக்களையே தன் குடும்பமாக நினைத்துப் பாடுபட்ட அவருக்கு இந்தப் பத்துப்பேர் சுமையாக இருந்திருக்க முடியாது. தனக்குப் பக்கத் துணை என்றே அவர் கருதியிருந்தார்.
பின்னூட்டமொன்றை இடுக